July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீதுவையில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா மாவட்டத்தின் சீதுவை பிரதேசத்தில் நேற்று இரவு விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குற்றக் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படும் 44 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை பின் தொடர்ந்து சென்று சோதனைக்கு உட்படுத்திய போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த ஒருவர் காயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உயிரிழந்துள்ள நபர் சீதுவை, மாத்தறை, கட்டுநாயக்க, வத்தளை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற மனித கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றக் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.