
யாழ்.காங்கேசன்துறைக்கு வடக்கு கடற்பரப்பில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
15 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் வடக்கு கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றை கடற்படையினர் முற்றுகையிட்டுள்ள நிலையில், படகில் இருந்து மூன்று பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்துள்ளனர்.
குறித்த மூன்று பொதிகளையும் மீட்டதுடன், படகில் பயணித்த மூன்று சந்தேக நபர்களையும் படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மூன்று பொதிகளில் சுமார் 103 கிலோ மற்றும் 750 கிராம் கேரள கஞ்சா காணப்பட்டதாகவும் இதன் சந்தை பெறுமதி 31 மில்லியன் ரூபா எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் படையினர் ஒப்படைத்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் உட்பட கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படை நாட்டின் கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.