July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து மீண்டும் இடைநிறுத்தம்!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.

ஜுலை 17 முதல் இவ்வாறு மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையே பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறாது என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணம் விட்டு மாகாணம் செல்ல வேண்டியவர்களுக்கென மாத்திரம் கடந்த 14 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்திருந்தது.

ஆனால் இது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டு மீண்டும் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.