July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 16 வயது யுவதியின் மரணம் குறித்து விசாரணை!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த 16 வயது யுவதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த நுவரெலியா டயகம பகுதியை சேர்ந்த குறித்த யுவதி, கடந்த ஜூன் 3 ஆம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி யுவதி நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அந்த யுவதி ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜுன் 3 ஆம் திகதி அவர் சமையலறைக்கு அடுத்ததாக தங்கியிருந்த அறையொன்றில் இருந்து உடைகள் தீப்பிடித்த நிலையில் வெளியே வந்ததாகவும், இதன்போது, வீட்டில் இருந்தோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து பதியுதீனின் வீட்டிற்குச் சென்ற நீதிவான், அங்கு தீப்பற்றிய அறையில் ஆய்வு நடத்தியுள்ளதுடன், சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்துமாறு பொரளை பொலிஸாரை கோரியுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள பொரளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.