July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமையே இலங்கைக்கு பொருத்தமானது; பஃவ்ரல் அமைப்பு

தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு பஃவ்ரல் அமைப்பு தெரிவித்ததுள்ளது.

பூகோள விடயங்கள், சனத்தொகை மற்றும் ஏனைய விடயங்களை கருத்தில் கொண்டு தற்பொழுது காணப்படும் தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிப்பது தொடர்பிலும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி பாராளுமன்ற விசேட குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற விசேட குழு கூடியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் முற்படுத்தப்பட்ட வாக்களிப்பு முறையின் தேவையை தெளிவுபடுத்திய பஃவ்ரல் அமைப்பு, அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குரிமையை வழங்குவது அத்தியாவசியமானது.அதேபோல் வேட்பாளர்களின் செலவீனங்களை வரையறுத்தல்,ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துதல்,தேர்தல் நாட்காட்டியொன்றை செயற்படுத்துதல், தேர்தல் முறைமையில் மற்றும் தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைகளை கண்டறிந்து அவற்றை புதுப்பித்தல்,அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதை தடுத்தல், தண்டப்பணம் மற்றும் தேர்தல் சட்டத்தை புதுப்பித்தல்,அனைத்து வாக்காளர்களும் நியாயமான வகையில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துதல்,பிரசாரங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளிட்ட போதுமான அளவு பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் பஃவ்ரல் அமைப்பு தெரிவித்தது.

வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பிரகடனப்படுத்துதல், தேசியப்பட்டியல் முறையின் ஊடாக வேட்பாளர்களை தெரிவு செய்தல், தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை பாதுகாத்தல் மற்றும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் முறைமை தொடர்பிலும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவது சாத்தியமில்லை என இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசார செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக துரிதமாக சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹாஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.