அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முழு அரசாங்கத்திற்கும் எதிரான பிரேரணையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனி நபர் ஒருவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசாங்கத்தில் உள்ள தரப்பினரை ஒற்றுமையடையச் செய்யும் வகையிலானதாகவே அமையும் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தனி நபருக்கு எதிராக அன்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழு அரசாங்கத்திற்கும் எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டும் எனவும், இதன்படி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.