July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வணிகக் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சரி செய்யப்பட்டது!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள வணிக கப்பலின் எண்ணெய் கசிவினால் ஏற்பட்ட கடல்சார் சுற்றாடல் மாசுபாடு சீர் செய்யப்பட்டுள்ளதாக  ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் எரிபொருள் நிரப்பும் போது, இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக துறைமுக நிர்வாகிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

எண்ணெய்க் கசிவால் ஏற்படும் கடல் மாசுபாட்டை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

குறைந்தபட்ச இரசாயனங்கள் பயன்பாடுடன் சுற்றுச் சூழல் நட்பு வழிகளைப் பயன்படுத்தி எண்ணெய் மீட்டெடுப்பு மற்றும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி ஜயவிக்ரமே தெரிவித்துள்ளார்.

வணிகக் கப்பலின் உரிமையாளர்களிடம் இருந்து இதற்கான செலவை பெற்றுக் கொள்ளும் வரை கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.