July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம்”: பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன என்பதனை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விசாரணையை மேலோட்டமாக முன்னெடுத்து, ஒருசிலரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இந்த விடயம் முடிந்துவிட்டது எனக் கூறி, விசாரணைகளை நிலவிரிப்புக்குள் மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சம்பவத்தின் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து ஆராயாமல் வழக்குகளை தொடர்வதன் மூலம் எமது மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியுமென்று அரசாங்கமோ அல்லது அது சர்ந்த நிறுவனமோ நினைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றுவதாக அமைந்துவிடும் என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது ஆழமான சதித்திட்டம் என்று முன்னாள் சட்டமா அதிபர் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பேராயர், அந்த சதித்திட்டத்தை அறிந்துகொள்ளும் உரிமை எமக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆயர்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராயர் கூறியுள்ளார்.