July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்று குறைவடைந்துள்ளது’: சுகாதார பணிப்பாளர்

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், வைரஸ் தொற்று பரவலும் குறைவடைந்துள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இப்போது நாம் முன்னெடுக்கும் சுகாதார கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இப்போது நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்றோ அல்லது நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றோ கூற முடியாது.

நாளாந்தம் 1500 இற்கு சற்று அதிகமான நோயாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர்.இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஆரம்பத்தில் நாம் இருந்த நிலைக்கு வந்தால் மட்டுமே நிலைமைகள் ஆரோக்கியமாக உள்ளதென கூற முடியும்.

நாட்டில் பி.சீ.ஆர் பரிசோதனையை முன்னெடுக்கும் வேளையில் பல நெருக்கடிகளை சந்தித்தோம். தொழிற்சங்கங்கள், போரட்டங்களை முன்னெடுத்ததுடன், தரவுகளை முறையாக முன்னெடுக்க முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘எவ்வாறு இருப்பினும் தற்போது கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதால் நாட்டில் வைரஸ் தொற்று பரவலும் குறைவடைந்துள்ளது என்பது மறுபக்கம் வெளிப்படுகின்றது.

எனவே இப்போது வைரஸ் தொற்று குறைகின்றது என்பதற்காக மக்கள் பொறுப்பில்லாது செயற்பட்டால் மீண்டும் தொற்று அதிகரிக்கும்.

மக்களின் பொறுப்பான செயற்பாடுகளில்தான் சகலதும் தங்கியுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதனால் தான் எம்மால் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் நிச்சயமாக நெருக்கடி நிலைமைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

அதேபோல், நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், 60 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.