![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/school.jpg?fit=570%2C393&ssl=1)
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் (12) நாளையும் (13) தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கை காரணமாக இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை தொடர்பிலும் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று கற்பிப்பிலிருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இருப்பினும், இணையவழி கல்வியைத் தொடர வேண்டும் என்றாலும் அது நிரந்தர தீர்வு அல்ல என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.