
எரிபொருட்களின் விலை உட்பட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் இன்றைய தினம் (12) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிபொருட்களின் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, ‘போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மலையகத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சம்பள உயர்வு என்பது கண் துடைப்பு நாடகமே. கைக்காசுக்கு வேலை செய்பவர்களுக்கு இன்னமும் 700 ரூபாவே வழங்கப்படுகின்றது.
எனவே, ஆயிரம் ரூபா விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல, ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ஊடக அடக்குமுறைக்கு இடமளிக்க முடியாது எனவும் எதிரணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.