![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/kerala-new.jpg?fit=630%2C417&ssl=1)
103 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் வடக்கு கடற்பகுதியில் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 344 கிலோ 550 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், அனலைத்தீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) அதிகாலை குறித்த வடக்கு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 11 பொதிகளில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது நாச்சிக்குடா, மன்னார் மற்றும் குருநகர் பகுதிகளை சேர்ந்த 34 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இலுவைப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைதான நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கேரள கஞ்சா தொகை என்பன காங்கேசந்துறை பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றியே கடற்படையின் இந்த சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ரோந்துப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.