
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், மிரட்டல், பணம் பறித்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இதற்கான புலனாய்வு பிரிவை நிறுவுவதற்கு ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பொது மக்களுக்கு தகவல்களை வழங்க எதிர்காலத்தில் சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதனிடையே, பொலிஸார் தமது கடமைகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற, நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் 2,000 புதிய முச்சக்கர வண்டிகள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
குற்றத் தடுப்பு மற்றும் விசாரணையை மேம்படுத்துவதன் மூலம் சமூக பொலிஸ் நிலையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முச்சக்கர வண்டிகள் பல்வேறு முறைப்பாடுகளை விசாரிப்பதற்கும், 119 அவசர அழைப்புகளுக்காக அனுப்பப்படுவதற்கும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியக கடமைகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.