July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம் அராஜகமான முறையில் செயற்படுகிறது; தமிழ் தேசிய கூட்டமைப்பு

அரசாங்கம் அராஜகமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (10) தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு போராட்டங்களை அரசாங்கம் கையாளுகின்ற முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு ஜனநாயக சூழலிலே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது யாருக்கோ எதிர்ப்பை காண்பிப்பதற்கான சூழல் நிச்சயம் இருக்கவேண்டும். கொவிட்19 ஐ சாட்டாக காண்பித்து கொண்டு பாதுகாப்பு படையினரை ஏவி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதும் நீதிமன்றம் அவர்களை பிணையில் விட்டாலும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வதாக சட்டவிரோதமாக கடத்தி செல்வதும் கடத்தி சென்று சட்டவிரோதமாக தடுத்து வைப்பதும் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உட்பட மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்ட முறைகளை நாங்கள் காணொளி முலம் பார்த்தோம்.

பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகிறார் என்பதற்காக பாராளுமன்றத்திற்கு வெளியேயும் மற்றும் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்திலும் பட்டாசு கொளுத்தப்பட்டது.இதனை பொலிஸார் தடுக்கவில்லை.மக்கள் ஒன்று கூடக்கூடாது என்றால் இதற்கும் அனுமதியில்லை.அவர்களையும் பொலிஸார் கைது செய்திருக்க வேண்டும்.

இத்தகைய நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடமாடுவதை தடுப்பதற்கோ எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துவதற்கோ சட்டத்தில் இடம் கிடையாது.வெறுமேன தாங்கள் நினைத்தபடி அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.