July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் யோசனை முன்வைப்பு

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்துள்ளார்.

கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன், இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேல் மாகாணத்தின் மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும் குருநாகல் மாவட்டத்துக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் தடுப்பூசிகளை, முறையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி இதன்போது சுகாதாரத் துறையினருக்கு எடுத்துரைத்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கெனவே முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும்.

மீதமுள்ளவற்றை, கேகாலை மாவட்ட மக்களுக்காக, முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென வழங்குமாறும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ‘பைசர்’ தடுப்பூசிகளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் மொடர்னா தடுப்பூசிகளைக் கண்டி மாவட்டத்துக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இதேதேவளை தற்போது கணிசமான சதவீதமானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், தூதரகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியதன் தேவை பற்றியும் இந்த கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.