July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ்,முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிலை விரைவில் சிங்களவர்களுக்கும் ஏற்படும்’

இராணுவ பல்கலைக்கழகங்களை உருவாக்குவதன் மூலமாக சாதாரண,இராணுவ கொள்கையை விரும்பாத மாணவர்களும் கண்டிப்பாக இராணுவ கொள்கைக்குள் ஈர்க்கப்பட்டு சிவில் சமூகத்தை இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.சமூகத்தை சர்வாதிகார கொள்கைக்குள் கட்டுப்படுத்துவதன் மூலம் நேற்று தமிழர்களுக்கு நடந்த அழிவுகள்,இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நாளை சிங்களவர்களுக்கு ஏற்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினர்,

கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதன் நோக்கமானது சாதாரண, இராணுவ கொள்கையை விரும்பாத மாணவர்களும் கண்டிப்பாக இராணுவ கொள்கைக்குள் செல்ல வேண்டிவரும். இது இராணுவ மயமாக்கலேயாகும்.இதற்கு வேறு வார்த்தைகளில் எதனையும் கூற முடியாது.

சாதாரண பிரஜைகளும் இராணுவ சிந்தனைகளுக்குள் உள்ளீர்க்கப்பட்டு இராணுவ நோக்கத்தில் அவ்வாறான நிறுவனங்களில் கற்று சமூகத்திற்குள் வருவார்கள். இதனால் சர்வாதிகாரத்திற்கு கட்டுப்படும் சமூகமொன்று உருவாக்கப்படும். ஆகவே சிவில் கற்கைகளுக்குள் இராணுவ மயமாக்கல் இருக்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.

யுத்தத்திற்கு பின்னர் எமது தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்.ஏனைய மாகாணங்களை போன்று அவர்களுடன் போட்டியிட முடியாத நிலையே உள்ளது.அவ்வாறு போட்டியிட சென்று இறுதியாக கடன் நெருக்கடிக்குள் எமது மக்கள் தள்ளப்பட்டனர்.வடக்கு,கிழக்கு மக்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவம் மூலம் நடத்தப்பட்ட விவசாய நிலங்களில் பணியாற்ற நேர்ந்தது.இது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்.