July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது

முல்லைத்தீவு,செல்வபுரம் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும் வீட்டு வாசலில் தரித்து நின்ற காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்துவதற்கு பணம் அனுப்பியிருப்பதாக சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன்,வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவத்தை தாங்களே நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள்,வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.