July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை’

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்,குற்றம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் நிலைமை இருந்தும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது 12 ஆண்டுகள் கடந்துள்ளது.இது இனியும் தொடர்ந்தால் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம்,சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன்.

அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலையத்தை பொறுத்தவரை இந்த பிரேரணை வந்தபோது தற்போதைய அரசாங்கம் மிக மோசமாக விமர்சித்தது.இந்த பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக கூறினர்.முன்னைய அரசாங்கமும் பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனை பயன்படுத்திக் கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலையம் மிகவும் முக்கியமானதாகும்.இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது.

அதேபோல், இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கமாட்டோம் என சிங்கள அரசியல்வாதிகள் கூறி க்கொண்டிருந்தனர்.அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும்.தமிழ் மக்கள் வலுக் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.