July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 1,000 ரூபாய் நாணயம் வெளியீடு!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு புதிய 1,000 ரூபாய் நாணயம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய 1,000 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் புதிய 1,000 ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கினார்.

இந்த நினைவு நாணயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரை தடாகம், மகிந்த ராஜபக்‌ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது  நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது.

கலையரங்குக்கு கீழே பெரிய இலக்கத்தில் 2022 என  குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என்றும் நாணயத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு  வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.