
இலங்கையில், 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது.
நாடு இயல்பு நிலையிலிருந்தால் ஜூன் மாதத்தில் முடிவுகளை வெளியிட்டிருக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கூறினார்.
இலங்கையில் கொரோனா 3 வது அலை காரணமாக ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி, அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். மற்றும் ஒரு மாத கால பயண கட்டுப்பாடுகளை அரசு விதித்தது.
இந்த நடவடிக்கைகள் சாதாரணதர பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது சாதாரணதர பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் தொற்று நோயுடன் நாட்டின் சூழ்நிலைகள் மாறும்போது சரியான திகதியை வெளியிட முடியாதுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.
2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு 2021 ஜூலை முதல் புதிய உயர்தர வகுப்புகளை தொடங்க அரசு எதிர்பார்த்தது.
எனினும் பரீட்சை முடிவுகள் தாமதமாகி விட்டதால் இந்த நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன.