July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கற்குவாரியில் கல் உடைப்பதை நிறுத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா,கற்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி புதிய சின்னக்குள கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கற்குவாரிக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது பிரதேசத்தில் வீடுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வவுனியா அக்போபர கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புதிய சின்னக்குள பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த கற்குவாரியில் கல்லுடைப்பதால் பொது மக்களின் வீடுகளில் வெடிப்புகள் ஏற்படுவதுடன், எந்தவித அறிவித்தலும் இன்றி வெடி வைத்து கற்களை உடைக்கும் போது அங்கிருந்து சிதறி வரும் கருங்கல் துண்டுகள் அருகில் உள்ள வீடுகளின் கூரையில் விழுவதுடன், தோட்ட காணிகளுக்குள் விழுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்தோடு பாரிய கற்களை உடைக்க பயன்படும் வெடி மருந்து காரணமாக சுவாச பிரச்சனை ஏற்படுவதோடு குழந்தைகள் மயக்கமடையும் நிலையும் ஏற்படுவதாகவும், மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்று வட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிற்கும் குறித்த கற்குவாரியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே குறித்த கற்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா, மாமடு பொலிஸ் அதிகாரி வெடி பொருட்கள் பயன்படுத்தி கல் உடைப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.