June 12, 2025 15:05:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடமராட்சி மீனவர்களின் 75 வலைகளை இழுத்துச் சென்றுள்ள இந்திய இழுவைப் படகுகள்’

நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் நமது கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து எமது வலைகளை இழுத்துச் சென்றுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் உப தலைவருமான வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

வடமராட்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

காங்கேசன்துறை, கட்டைக்காடு, சுண்டிக்குளம் போன்ற பகுதிகளில் நாம் தொழில் செய்கின்ற வலைகளை இழுத்துச் சென்று நாசம் செய்துள்ளன. இதன் மூலம் எங்களுடைய 75 வலைகள் இழுத்துச் செல்லப்பட்டன.வல்வெட்டித்துறை பகுதியில் 3 முரல் வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்களும் பல நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இது சம்பந்தமாக இந்திய தூதரகம், கடற்றொழில் அமைச்சர் ஆகியோரிடம் நாங்கள் பேசினோம். தீர்வு பெற்றுத் தருவதாக கூறினார்கள்.ஆனாலும் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் நமது கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து எமது வலைகளை இழுத்துச் சென்றுள்ளன.

பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் இழுத்துச் செல்லப்பட்டன . இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் கடற்படைக்கு அறிவித்து இந்திய இழுவை படகுகள் எமது எல்லைக்குள் வராமல் தடுப்பது அவசியமானதாகும் .

இதுவரை இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.