July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அனைத்து சிறு கட்சிகளையும் இணைத்தே தேர்தல் சீர்திருத்தம் அணுகப்படும்”; மனோ கணேசன்

தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இன ரீதியான சிறு கட்சிகளும், அரசியல் ரீதியான சிறு கட்சிகளும் தேர்தல் சீர்திருத்தம் என்ற பொது பிரச்சினையை கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறு கட்சிகளின் தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்பில் கருத்து கூறிய போதே மனோ எம்.பி. இதனை தெரிவித்தார்.

எவரையும் தவிர்த்து விட்டு பயணிக்கும் எந்தவித தேவையும் கிடையாது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டு செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்படும் என்றார்.

இது குறி்த்து மேலும் பேசிய அவர்,

இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி.யும் உறுதியளித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசுகின்ற அதேவேளை, நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.

இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்கு கூறியபோது, சஜித் பிரேமதாச  தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அழைத்து அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேபோல், தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடனும் நான் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன்.

வடக்கு மாகாணத்தில் புதிய கலப்பு முறைமை தமக்கு சாதகமாக அமையக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், நாடு முழுக்க சிதறி வாழும், தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாமும் இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை ஆதரிக்க தயார் என கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் என்னிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.