July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்படாது”: பிரதமர்

கொரோனா தொற்று நிலைமைக்கு வெற்றிகரமாக முங்கொடுத்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் கபுதுவ பிரதேசத்தின் நுழைவாயிலை திறந்து வைக்கும்  நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அன்று பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நாட்டில் நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் மருத்துவமனைகள் மற்றும் தமது தொழில்புரியும் இடங்களுக்கு குறித்த நெடுஞ்சாலைகள் மூலம் சென்று வருகின்றனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் கொரோனா தொற்று முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் தெரிவித்தனர். இவ்வாறு சொல்பவர்கள் உண்மையாகவே சொல்கிறார்களா, இல்லையா என்பது தொடர்பில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி ஒன்றையும் செய்யமுடியாதென்று கூறினால் அது நாட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும். நாம் நாட்டு மக்களை முறையாக பாதுகாப்போம். அதற்காக ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் தெரிவித்தார்.