June 14, 2025 8:05:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழில் இந்தியா முன்னிற்பது குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை’: அமைச்சர் பிரசன்ன

நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து கேட்பதில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான களப் பயணமொன்றின் போதே, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன தொடர்பாக எதிர்க் கட்சிக்கே பிரச்சினை இருப்பதாகவும், அரசாங்கத்துக்கு எந்த நாடு உதவி செய்தாலும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே தமது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி திட்டத்திற்கும் சீனா உதவ முன்வந்தால், தாம் அதனையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் போது, விமான நிலையத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம் என்றும் சுற்றுலா பயணிகள் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான சூழல் அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் போன்ற திட்டங்களை பசில் ராஜபக்ஷ முன்னெடுத்ததாகவும், பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.