July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையத்தளம் ஊடாக 15 வயது சிறுமி விற்பனை; இதுவரை 17 பேர் கைது!

கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த சிறுமியின் தாய், சிறுமியை முதன்முதலில் விற்பனை செய்தவருடன் தகாத முறையில் உறவுகளை பேணும் பெண்ணொருவர், முச்சக்கர வண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சிறுமி தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியவர் உள்ளிட்டோர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுமியை பணம் கொடுத்து வாங்கிய மேலும் 20 பேரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்து வைத்து இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 35 வயதான குறித்த சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு எண் 22 தண்டனைச் சட்டத்தின்படி, 16 வயது அல்லது அதற்கு குறைவான நபர்களை பாலியல் தொழிலாளர்களாக விற்பனை செய்வது குற்றவியல் குற்றமாகும்.