July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் அதிருப்தியில்!

அரசாங்கத்திற்குள் எடுக்கப்படுகின்ற அவசர தீர்மானங்களினால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் காரணமாக சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அண்மைக்கால நிலைப்பாடுகள் காரணமாக முக்கிய அமைச்சர்கள் சிலர் ஓரங்கட்டப்படுவதாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சிக்குள் பங்காளிக்கட்சிகளை இலக்குவைத்து தாக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகின்ற நிலையில், அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வுகான அரச பிரதானிகளின் தலைமையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனபோதும் அந்த முயற்சிகளுக்கு இதுவரையில் சாத்தியமான பதில் எதுவும் கிடைக்காதுள்ளதாகவும், தொடர்ச்சியாக பங்காளிக்கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இயங்கிய எப்பாவெல பொஸ்பேர்ட் நிறுவனத்தை மாற்றியமை, அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலக வலியுறுத்தியமை போன்ற விடயங்களில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும், அமைச்சரவையில் இதனை வெளிப்படையாக தெரிவித்தும் சிலரது தனிப்பட்ட தீர்மானங்கள் காரணமாக ஒரு சில அமைச்சர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.