
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசு,மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீன நாட்டவர் ஒருவர் சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனையில் உள்ள கல்முனை பகுதியில் சீன நிறுவனத்தினால் அனுமதியற்ற கடலட்டை வளர்ப்பு தொடர்பில் பார்வையிட சென்ற பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில் சீனர் ஒருவரால் அமைக்கப்பட்ட அட்டைப் பண்ணையை பார்ப்பதற்காக வந்திருந்தோம்.
குறித்த பகுதி கௌதாரிமுனை, கல்முனை பகுதி மக்கள் காலாதிகாலமாக தொழில் செய்து வருகின்ற இடமாக இருக்கின்றது. அவ்வாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சம்மதம் ஏதும் பெறப்படாமல் கடல் அட்டை வளர்ப்பதற்கும்,அவர்கள் தங்குவதற்கான மிதக்கும் கொட்டகையும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வாறான இடத்திலேயே அந்த சீனர் கடலட்டை வளர்ப்பினை மேற்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். எந்தவிதமான முறையான அனுமதிகளும் பெறப்படாமல் குறிப்பாக இந்த பிரதேச மீனவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த இடம் அவர்களிற்கு கடலட்டை வளர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் அபிவிருத்தி திணைக்களத்தின் அரியாலையில் இருக்கின்ற ஓர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டிருப்பதாக தகவல் இருக்கின்றது. ஆனால் எந்தவிதமான ஆவணமும் அவர்களால் இன்றைய தினமும் காட்டப்படவில்லை.
ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு இலகுவாக வந்து இந்த இடத்தை பிடித்து கடலட்டை வளர்க்கின்ற செயற்பாடு இடம்பெறுகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது.இதனை சட்டவிரோதமான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இங்கே அது தொடர்பாக ஆட்சேபனைகள் எழுந்திருக்கின்ற போதிலும் கூட அந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழர்களின் பிரதேசத்தில் அந்நியர்கள் வந்து இந்த பிரதேச மக்களின் அனுமதியில்லாமல் உள்நுழைந்திருப்பது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வீணே ஒரு பதற்றத்தை இந்த பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
அல்லது சீனர்கள் என்றதும் அரசு நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றதா என்ற கேள்வியும் இருக்கின்றது.தமிழர்கள் சில காரியங்களை செய்கின்ற பொழுது சம்மந்தம் இல்லாமல் அவர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக கூறி பிடித்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால் எங்கிருந்தோ வந்த சீனர் மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக எங்களுடைய மக்களை தெருவில் விட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.