July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யானை கடத்தல் சர்ச்சை; தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் வன ஜீவராசி அதிகாரிகள்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வன ஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.

கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், யானை கடத்தல் தொடர்பாக தமது திணைக்களத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து குறிப்பாக மின்னேரியா தேசிய பூங்கா பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக கூறினார்.

இதன் போது இரண்டு வண்டிகளில் குறித்த இடத்துக்கு வருகை தந்திருந்த இராணுவத்தினர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரியுடன் முரண்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் முறையற்ற விதத்தில் திணைக்கள அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததுடன், அதிகாரிகளை தாக்கியுள்ளதாகவும் பிரபாஷ் கருணாதிலக சுட்டிக்காட்டினார்.

சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.

மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்த மாதம் 2 ஆம் திகதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வன ஜீவராசிகள் அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.