October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்’ ;சுமந்திரன்

“வடக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சீன ஆதிக்கத்துக்கு விரைவில் முடிவுகட்டப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி, கௌதாரிமுனை கடல் பரப்பில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடும் சீன நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் இன்று குறித்த பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கில் சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த விடயத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். குறித்த அமைவிடம் மக்களுக்கு தெரியாத மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்ற விபரத்தையும் நாங்கள் சேகரித்துள்ளோம். சட்டவிரோதமான அனுமதி கடற்றொழில் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

இதேவேளை, நேற்று குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்குச் சென்று திரும்புகின்ற போது வீதி அபிவிருத்திப் பணிகளில் சீனர்கள் நின்றார்கள்.நான் படம் எடுத்து வைத்துள்ளேன்.

வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள் கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றார்கள்.

எங்கள் மக்களுடைய கடல் வளத்தை சுரண்டுவதும், கடலட்டைகள் பிடிப்பது தொடர்பிலும் பல தடவைகள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.

வெளி இடங்களிலிருந்து வந்து தொழிலை செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்போது வெளி இடங்கள் என்று சொல்வதற்கு அப்பால் வெளிநாடுகளிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.