June 14, 2025 17:33:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று முதல் பதவியேற்பர்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உள்ளூராட்சி உறுப்பினர்கள் 59 பேர் இன்று முதல் பதவியேற்கவுள்ளனர்.

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் இவர்கள் புதிய உறுப்பினர்களாக பதவியேற்பர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

2018இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட 59 பேர் தமது உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து  அண்மையில் நீக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்திற்கமைய இவர்களின் பதவிகளை இரத்துச் செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி, அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது.

அவர்கள் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதுடன், அதன் பின்னர் தமது உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் பதவியேற்கவுள்ளனர்.

இதன்போது வெலிகம, தங்காலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.