July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டை முடக்குவது குறித்து தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி

நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை.ஆனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமைய தீர்மானங்கள் எப்போதும் மாறலாம் என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்து, சுகாதார தரப்பினர் ஒவ்வொரு நாளும் இது குறித்து தரவுகளை பதிவு செய்கின்றனர்.அத்துடன் கொவிட் செயலணி கூட்டத்திலும் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும்.ஏற்கனவே தவறான தரவுகளை வெளிப்படுத்திய காரணத்தினாலேயே நாடு அவசரமாக முடக்கப்பட்டது.

தற்போதுள்ள நிலையில் இரண்டாயிரத்திற்கும் குறைவான கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்படுகின்றனர்.மரணங்கள் பதிவான போதிலும் அவை ஒரு நாளுக்கான மரணங்கள் அல்ல. எனவே நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

ஆனால் வைரஸ் தொற்று பரவவில்லை என கருத்தில் கொள்ளக்கூடாது என சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.அடுத்த ஒரு மாதகாலம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.மக்களின் செயற்பாடுகளில் தான் இது தங்கியுள்ளது.

அதேபோல் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மாதத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று மில்லியன் தடுப்பூசிகளை இதுவரை ஏற்றியுள்ளோம்.அடுத்த இரு மாதங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை ஏற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.