
File Photo
பேஸ்புக்கில் நபர் ஒருவரை அவதூறுக்கு உட்படுத்தி பதிவிட்டதாக தெரிவித்து, இருவரை கடத்திச் சென்று அவர்களை கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ள சம்பவமொன்று இலங்கையின் கண்டி மாவட்டம் பலகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இருவரையும் அம்பிட்டிய பகுதிக்கு கடத்திச் சென்றுள்ள சந்தேக நபர்கள், அவர்களை சிலுவைப்போன்ற பலகைகளில் வைத்து ஆணி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் அம்பிட்டிய பிரதேசத்தில் ஆலயம் ஒன்றை நடத்திச் செல்லும் 30 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர்கள் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை துன்புறுத்தலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள 44 மற்றும் 38 வயதான நபர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.