
File Photo
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.
தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு பஸில் ராஜபக்ஷ கடந்த மே 11 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
இவரின் இந்தப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த காலப்பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அந்தக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பஸில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையை அதிகரிக்க இடமளித்திருக்க மாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஸில் ராஜபக்ஷ இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளமை கொழும்பு அரசியலில் பரபரப்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.