October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரன் எம்.பி

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து பரிசீலனை செய்வதை விடவும் முற்று முழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீண்ட காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக் காலமாக சிறிய தவறுகளில்,முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறிய விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது. ஆனால் இந்த விடயத்தை 2009 ஆம் ஆண்டில் செய்திருக்க வேண்டும்.அப்போது 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வு வழங்கி விடுவித்ததாகவும்,மூவாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியதாகவும் கூறினீர்கள்.அப்படியென்றால் சில நூறு பேரை ஏன் 30-40 ஆண்டுகளாக தடுத்து வைத்தீர்கள். இது குறித்து நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்.

இன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போகின்றமை,அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை என்பவற்றை வைத்துக்கொண்டு சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் இதனை செய்ய முயற்சிக்கின்றீர்கள்.எவ்வாறு இருப்பினும் காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது.எனவே அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த சட்டத்தினால் நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.இறுதியாக 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்பில் தானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய நாடுகள் இன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற காரணத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.