May 25, 2025 16:19:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கடல் உணவுகளை உட்கொள்வதில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை’

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் எமது கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் கடல் உணவுகளை உட்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை நாரா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பேசிய அவர், மக்கள் கடல் உணவுகளை உற்கொள்வதில் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.

கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழிலுடன் இணைந்து தொழிலை மேற்கொள்ளும் குடும்பங்களுக்கும் தற்காலிக நிவாரணத் தொகையாக ஐயாயிரம் ரூபாவை கொடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து நட்டஈடு கோரப்பட்டு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

அதேபோல் கப்பல் விபத்தால் ஏற்பட்டுள்ள சகல விதமான பாதிப்புகளுக்கும் ஏற்ற வகையிலான நட்டஈடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.

இடைக்கால நட்டஈடு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இரண்டு வாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக குறித்த நிறுவனத்திடம் கோரியுள்ளோம்.

சட்ட முறைப்படி மீன்பிடி மக்களுக்கு கொடுக்கும் சகல நட்டஈட்டையும் பெற்றுக் கொடுப்போம் என்றார்.