July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வடக்கு, கிழக்கில் காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்”: கஜேந்திரன் எம்.பி

தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியும் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன அபிவிருத்தி திருத்தச் சட்டம் மீதான விவாதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் படையினரால் பல ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கஜேந்திரன் எம்.பி, அந்த காணிகளில் சில பகுதி சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கஜேந்திரன் எம்.பி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படக் கூடாது எனவும், தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடமே மீள கையளிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவுவும் அவர் தெரிவித்துள்ளார்.