July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

2021-2022 ஆம் ஆண்டிற்கான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு தடைவிதித்தும், தற்போதைய செயற்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடடைபெற இருந்த குறித்த தேர்தலுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர்கள் குழு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்த நாளில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அவர் கூறியதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதனை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி தேர்தலுக்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் பிரியந்த அத்தபத்து, தேர்தல் குழு தலைவரினால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு அற்ற அந்த சங்கத்தின் நியமனங்களை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கொழும்பு மாவட்ட மேல் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.