July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தோட்ட நிர்வாகம் மிரட்டுகிறது’: கொட்டகலையில் தொழிலாளர்கள் போராட்டம்!

20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக தெரிவித்து, நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை – டிறேட்டன் டீ.டி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு 800 ரூபாவே வழங்கப்படுகின்றது எனவும், இதனால் தமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளொன்றுக்கான பெயருக்கு 17 கிலோ கொழுந்தே முன்னர் பறிக்கப்பட்டது. ஆனால் தற்போது 20 கிலோவுக்கு குறைவாக பறிப்பவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படும் என நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் உடனடி தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், தோட்ட முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

This slideshow requires JavaScript.

” சம்பளத்துக்கு போராடினால் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அவ்வாறான நடவடிக்கை தற்போது எமது தோட்டத்தில் நடக்கின்றது. அடிப்படை நாட் சம்பளத்துக்கு 17 கிலோ கொழுந்து பறித்தால் போதும் என்ற ஏற்பாடு உள்ள நிலையில் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன” என்று தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

”நிர்வாகத்தின் அடாவடித்தனமான மற்றும் தொழிலாளர்களை அடிமைகளாக வழிநடத்தும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.