July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று நாட்களில் சிலாபம் கடற்பரப்பில் வைத்து 308 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

சிலாபம் கடற்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 308 கிலோ கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில் சிலாபம் – முக்கு தொடுவாவ கடற்பரப்பில் இன்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த 23 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளை பிரிவினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த சாக்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சாக்கில் இருந்து 10 பைகளில் பொதியிடப்பட்டிருந்த 23 கிலோவும் 100 கிராமும் எடை கொண்ட கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிலாபம் கடற்பரப்பில் வைத்து சுமார் 308 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இதனிடையே, சிலாபம் கடற்பரப்பில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை கைது செய்ய கடற்படை மற்றும் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.