October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழில் கொரோனா அபாய நிலைமை நீங்கவில்லை’:அவதானமாக செயற்படுமாறு அரச அதிபர் கோரிக்கை

கொரோனா

யாழ்.மாவட்டத்தில் இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை என்பதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய (18) தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நேற்றைய தினம் (17) மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1754 குடும்பங்களைச் சேர்ந்த 5613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4668 ஆக அதிகரித்துள்ளதுடன், 63 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லூர் அரசடி பகுதி இன்று (18) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் எதிர்வரும் திங்கட்கிழமை பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது. இதன்போது அவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்களை வெளியில் செல்லுமாறு அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ,சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கும் விரைவில் வழங்கவுள்ளதாகவும் அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.