July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் டெல்டா வகை கொவிட் தொற்றுடன் இலங்கையில் ஐவர் அடையாளம்!

இந்தியாவில் வேகமாக பரவிவரும் அதி வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐவர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த ஐவரும் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

இதன்படி டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் இலங்கையில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

கடந்த முறை அடையாளம் காணப்பட்ட B 117 வைரஸ் பிரிவை விடவும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள B.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் அதிக வீரியம் கொண்டது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக மருத்துவக் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக டெல்டா கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த நிலையிலேயே அந்தத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதேவேளை பிரித்தானியாவின் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்று உறுதியான 8 பேர் காலி, மட்டக்களப்பு, கொழும்பு 06, கொழும்பு  08 மற்றும் கொழும்பு 10 ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.