July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கடன் பெற்ற மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்”: அதிகாரிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் இருந்து கடன்களை மீளப்பெறும் போது அவர்களின் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் அலரிமாளிகையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்றில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஈடுபட்டிருந்தார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
கடன்களை மீளப்பெறும் போது, கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது பிரதமர் கவனம் செலுத்தியிருந்தார் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டீ.லக்ஷ்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.