June 16, 2025 6:06:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திடுங்கள்; சாகரவுக்கு சஜித் அணி அழைப்பு

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கட்டாயம் கையெழுத்திடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அழைப்பு விடுத்துள்ளார் .

எரிபொருள் விலை குறைக்கப்படாவிட்டால் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் கறுப்புக் கொடியேந்தி வீதிகளில் போராடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு,பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தின் காரணமாக பெருமளவான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மீனவர்களால் கொண்டு வரப்படும் மீன்களை கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோர் அஞ்சுகின்றனர்.

கொரோனா பரவலும் அந்த மக்களின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே நாம் பேராயரை சந்தித்தோம்.

கத்தோலிக்க மக்களுக்காகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மக்களுக்காகவும் பேராயர் முன்னின்று செயற்பட்டுள்ளார். 2015 இற்கு முன்னர் காணப்பட்ட அரசில் எரிபொருள் சலுகையை பெற்றுக் கொடுப்பதற்கும்,எமது அரசில் மண்ணெண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு எதிராகவும் பேராயர் மக்களுக்காக முன்னின்று செயற்பட்டார்.

எனவே,மீனவர்களின் நலன் கருதி எரிபொருள் விலையை குறைக்குமாறு அரசிடம் கோரிக்கையை முன்வைக்குமாறு பேராயரிடம் கேட்டுக் கொண்டோம்.

மேலும், ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள 40 மில்லியன் டொலர் நட்ட ஈட்டை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பயன்படுத்த அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறும் பேராயரை கேட்டுக் கொண்டோம்.

மக்களுக்கான இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இன்று அரசில் யாரும் இல்லை.ஆட்சியாளர்கள் சர்வாதிகாரப் போக்கிலேயே செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சியாளர்களால் மேற்குலக நாடுகளிடம் மண்டியிட்டு கடன் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பதவி விலகுமாறு வலியுறுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு எம்மால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் உதய கம்மன்பில பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும் மீனவர்களுக்கான நிவாரணங்களுக்காக குரல் கொடுப்பதை நிறுத்தப் போவதில்லை.

எரிபொருள் விலை குறைக்கப்படாவிட்டால் நீர்கொழும்பில் கறுப்புக் கொடியேந்தி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதிகளில் இறங்கிப் போராடுவோம். மீனவர்களே வீதிக்கு இறங்குவதற்கு தயாராகுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.