
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மதுபானங்களை இணையவழியில் கொள்வனவு செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான யோசனையை இலங்கை மதுவரித் திணைக்களம் முன்வைத்துள்ளது.
சுப்பர் மார்கட்கள் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை நிதி அமைச்சின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மதுபானங்களை இணையவழியில் விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றைக் கருத்திற்கொண்டே, மதுபானங்களை இணையவழியில் விற்பனை செய்ய நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.