July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

File Photo

யாழ்ப்பாணத்தில் சுகாதார பிரிவின் அனுமதியின்றி நடத்தப்பட்ட திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த நிகழ்வின் புகைப்பட பிடிப்பாளரினால் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி – காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில் , சுகாதார பிரிவின் அனுமதியின்றி நேற்று திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், இந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது, திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் அங்கிருந்து சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும் மணமக்கள் வீட்டார் , குருக்கள் , புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை தடுத்து வைத்த பொலிஸார், அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதன்படி அங்கு வந்திருந்த சுகாதாரப் பிரிவினர், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன் புகைப்படப்பிடிப்பாளரிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.