
இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடல் பகுதியில் படகொன்றில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது 237 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மூடைகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 71 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அந்தப் படகில் இருந்த மூன்று பேரை கைது செய்துள்ள கடற்படையினர் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
சுற்றிவளைப்பை மேற்கொண்டு படகை சோதனையிட்ட போது அதனுள் இருந்து மூன்று கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் படகில் இருந்த சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதன் மூலம், அவர்களால் கடலுக்குள் வீசப்பட்டிருந்த மேலும் 6 மூடைகளை மீட்டதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.