July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 700 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்கான கோரிக்கையை எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த புதிய விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை உப குழு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க, தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பிலும் அதன் இறக்குமதி நிறுவனங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், பேக்கரி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.