July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பிரதமர் ஆலோசனை!

இலங்கையில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் போது நீண்ட காலமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நோய் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் இன்று (12) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக் கொடுக்க முடியும் என சிறுவர் மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன் போது பிரதமரிடம் தெரிவித்தனர்.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன் ஏற்பாடாக ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டத்தில் தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் 279000 ஆசிரியர்கள் மற்றும் 300000 கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கபில பெரேரா விளக்கினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

அத்தோடு பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.