
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்குப் பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கும் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
கப்பல் விபத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை, கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.